கிராமம் நகரம் மாநகரம் by நா.முத்துக்குமார் Published :டிஸ்கவரி புக் பேலஸ் , 1st Edition @2021
கிராமத்தில் பிறந்து நகரத்தில் படித்து மாநகரத்தில் வசித்து வரும் ஒரு மனிதனின் மனவோட்டங்களை கட்டுரை நெடுக வெளிப்படுத்தியுள்ளார். கிராமம், நகரம், மாநகரம் என மூன்றையும் கட்டுரை வாயிலாக காட்டியிருந்தாலும் கிராமத்தையே முன்னிறுத்துகிறார். முதன்மைப் படுத்துகிறார். கிராமத்தையே சிறந்தது என்கிறார். ஏன் என்பதற்கு காரணத்தை ஒவ்வொரு கட்டுரையிலும் குறிப்பிட்டுள்ளார். கிராம நன்மைகளையும் மாநகர தீமைகளையும் பட்டியலிட்டுள்ளார். தற்போது மாநகரத்தில் வாழும் நா. முத்துகுமாரின் மனத்தில் கிராமமே வாழ்கிறது என ஒவ்வொரு கட்டுரையிலும் உறுதிப்படுத்தியுள்ளார். கிராமம், நகரம், மாநகரம் ஆகியவற்றில் இடைப்பட்டதான நகரம் பற்றிய குறிப்புகள் குறைவாகவே உள்ளன. கிராமம், நகரம், மாநகரம் குறித்ததானாலும் மனிதர்கள் சிலரையும் அறிமுகம் செய்கிறார். ஓவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதமாய் நெஞ்சில் நிழலாடுகின்றனர். கவிதை மொழிக்கும் கட்டுரை மொழிக்கும் இடைப்பட்டதாக உள்ளது மொழி நடை. வசீகரமான சொற்கள் வாசிப்பை விறுவிறுப்பாக்குகின்றன. கட்டுரை ஒவ்வொன்றிலும் ஒரு மேற்கோள் காட்டியுள்ளார். பெரும்பாலானவை கவிதைளே.