அரபு வசந்தம் by சி.பிரசாத் Published by சேமமடு பதிப்பகம் , 1st Edition
‘வரலாறு ஒரே நேரத்தில் விடுதலையாகவும், தேவையாகவும் இருக்கின்றது’ என்கின்றார் கிராம்சி. தொன்மையான சமூகம் அதன் கூட்டுத் தன்மையிலிருந்து தனித்து அமைப்பாக மாறி, மாபெரும் உழைப்புப் பிரிவினையாக மாறியது. இதன் தொடர்ச்சியே தந்தைவழி சமூகத்தின் உருவாக்கம். வரலாற்றுத் தொடர்ச்சியில் இந்த அமைப்பு முறை பரிணாமமடைந்து ஒவ்வொரு பிராந்தியத்திலும் வித்தியாசமான குணவியல்புகளை அடைந்தது. இது இஸ்லாமிய சமூகத்திலும் அமைப்பிலும் பிரதிபலித்தது. அரபு நாடுகளில் புதிய தந்தைவழி சமூகமாக உருமாற்றம் அடைந்தது. அது ஐரோப்பிய நவீனத்துவத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தியது.
அரபு மக்களின் போராட்டத்தினை எடுத்துக் கொண்டால், எகிப்து (1830), அல்ஜீரியா (1870), துனீசியா (1882), மொராக்கோ (19911) போன்ற நாடுகளில் காலத்துக்குக் காலம் தொடர்ச்சியாக ஏற்பட்ட போராட்டங்களி தோல்வி அரபுலகை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தின. ‘ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கால மதிப்பீடுகளை உள்வாங்கல், ஏகாதிபத்தியம் மற்றும் காலணியாதிக்கத்திற்கு எதிரான போராட்டங்கள் போன்றவற்றால் அதன் புரட்சிகரத் தன்மை வெளிப்படத் தொடங்கியது’ என்கின்றார் சமீர் அமீன்.
தேசியம் என்கின்ற கருத்துக்கு நேர் எதிரான நிலையில் ஏகாதிபத்தியமும், காலனித்துவமும் இருக்கின்றன. ஏகாதிபத்தியம் உழைக்கும் நாடுகளையும், மற்றைய நாடுகளையும் தன்னை விரிவுபடுத்திக் கொள்வதற்காகவும், பலப்படுத்திக் கொள்வதற்காகவும் கடுமையாக ஒடுக்குகின்றது. அதாவது ஏகாதிபத்தியம் சுயநிர்ணய உரிமையை ஒடுக்குகின்றது. இதன் விளைவாக ஒடுக்கப்பட்ட நாடுகள் தம்மைக் கட்டியெழுப்பிக்கொள்கின்ற தன்மையே அரபுலகின் சமூகப் புரட்சி எனலாம். நவீன அரபுலகம் பின்வரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது.
í அமெரிக்காவின் உலகளாவிய செயல் தந்திரமும் அதன் பரிணாமமும்.
í சோவியத் தகர்விற்குப் பிந்திய உலகின் எதிர்காலம்.
í புதிய உலகமயமாக்கல் சூழலில் வளர்ச்சி பற்றிய கேள்வி.
í பலஸ்தீனப் பிரச்சினையும், மேற்கத்தேய அரசியல், சமூக சக்திகள் மீதான சியோனிச தாக்கமும்.
í அரபுலக அரசுகளின் உள்ளக மற்றும் வெளியக சலனங்கள்.
இவை போன்ற காரணங்களினால் அரபு மக்கள் அடக்குமுறையில் இருந்து விடுபட்டு சுதந்திரத்தினையும், உரிமையையும் பெற்றுக் கொள்ளும் நோக்கோடு மேற்கொள்ளப்பட்ட ஒரு வகையான போராட்டமாகவோ அல்லது ஆட்சிமாற்றத்தினை வேண்டி மக்கள் ஒன்றிணைந்த ஓர் போராட்டமாகவோ அரபு வசந்தம் என்பதனை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும். அதாவது அரபு மக்களின் போராட்டம் தமது நாடுகளில் ஆட்சிமாற்றம் வேண்டும் அல்லது இந்த அதிபர் ஒழிய வேண்டும் என்பதாகும். இவ்வகையான போராட்டத்திற்கு வேலைவாய்ப்பின்மை, வறுமை, சுதந்திரமின்மை, பெண்களின் உரிமை மறுக்கப்பட்டமை, ஆட்சியாளரின் சர்வாதிகாரம், ஒடுக்குமுறைகள் போன்றன பின்புலமாக அமைந்தன.
ஆனால், அரபுலகில் ஏற்பட்ட இந்த ஆட்சிமாற்றப் போராட் டங்கள் சித்தாந்தத்தால் வழிநடத்தப்படாத ஒருங்கிணைக்கப்படாத தெளிவான கொள்கையும், தீர்வும் முன்வைக்கப்படாத போராட்டம் என்பதனால் வெற்றி காண்பது சிரமம். குறிப்பாக எகிப்து, லிபியா, துனீசியா போன்ற நாடுகளில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட போதிலும் இற்றைவரையிலும் அந்த நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இங்கு முற்றுமுழுதாக இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களினதும், இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்களினதும் ஆதிக்கம் மேலோங்கியுள்ளதோடு அவர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கின்றமையால் போராட்டத்தின் இலக்கு மாற்றம் பெற்று குறித்த அக்குழுக்களுக்கும் அரசுக்குமான போராட்டமாக உருப்பெற்றுள்ளது. அரபு மக்கள் சுல்தான் சர்வாதிகார ஆட்சியினையோ, இஸ்லாமிய அடிப்படைவாதத்தினையோ நிராகரிக்கவில்லை. மாறாக மக்களது அடிப்படைத் தேவைகளையும், சுதந்திரத்தினையுமே எதிர்பார்க்கின்றது.
உள்ளடக்கம் : அரபு வசந்தம் – ஓர் அறிமுகம் ,புரட்சி இடம்பெற்ற அரபு நாடுகள் (துனீசியா,எகிப்து,லிபியா,சிரியா,பஹ்ரைன்,ஏமன்,மொராக்கோ, ஜோர்டான், அல்ஜிரியா,சூடான்,ஓமான்,சவுதிஅரேபியா, ஈராக், சோமாலியா) புரட்சியின் தாக்கத்துக்கு உள்ளாகிய பிறநாடுகள் ( சீனா ,அமெரிக்கா , மலைதீவு) புரட்சியின் பின்புலம் i. நேரடியான காரணி, ii. மறைமுக காரணி புரட்சியின் விளைவு (அரசியல் விளைவு, சமூகவிளைவு, பொருளாதார விளைவு, சமயநிலை, ஏகாதிபத்திய நலன், ஜனநாயக விழுமியங்கள்