பாடசாலை முகாமைத்துவம்:கோட்பாடுகளும் பிரயோகங்களும் by கி.புண்ணியமூர்த்தி Published by சேமமடு பதிப்பகம், 2nd Edition
உள்ளடக்கம் : முகாமைத்துவம், பாடசாலை பதவியணி ,விளைதிறன்மிகு பாடசாலைகளும் ஆசிரியர்களும், பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டமும் நடைமுறைப் பிரச்சினைகளும்,பாடசாலை முகாமைத்துவத்தில் திட்டமிடல்,விழுமிய விருத்தியும் அதிபர்களும் ,பாடசாலை அதிபர்களும் முகாமைத்துவத் திறன்களும் ,பொது நிர்வாகமும் கல்வி நிர்வாகமும்,ஆசிரிய ஊக்குவிப்புக்கள் ,தேர்ச்சி மையக் கலைத்திட்டமும் அதிபர்களின் வகிபாகமும்,மனிதவள முகாமைத்துவம், கல்வி நிர்வாகத் தலைமைத்துவம் , பாடசாலையும் பெற்றோரும், அதிபர்களின் முகாமைத்துச் செயற்பாடுகள் .
நிறுவனத்தின் முகாமையாளர்கள் ஒவ்வொருவரும் முகாமைத்துவக் கோட்பாடுகளை அறிந்திருத்தல் இன்றியமையாதது. நிறுவனம் தொடர்பான பயனுள்ள அகக்காட்சியைப் பெறுதல், நிறுவனத்தின் வளங்களைச் சிறப்பாகப் பண்படுத்துதல், விளைதிறனுள்ள முகாமைத்துவம், விஞ்ஞான முறையிலான தீர்மானம் மேற்கொள்ளல், சூழல் மாற்றங்களால் ஏற்படும் தேவைகளை நிறைவேற்றுதல், சமூகப் பொறுப்பினைப் பூர்த்திசெய்தல், பயிற்சி மற்றும் கல்வி ஆராய்ச்சிகளை முகாமைத்துவம் செய்தல் முதலிய விடயங்களின் அடிப்படையில் ஒரு நிறுவனத்தின் வெற்றியைத் தீர்மானிப்பதற்கு முகாமைத்துவக் கோட்பாடுகள் பக்கபலமாக இருக்கின்றன. பாடசாலையின் முகாமைத்துவப் பொறுப்பை ஏற்பவர்கள் அன்றாட நிருவாகச் செயல் முறைகளை நிறைவேற்றுவதுடன் நின்றுவிடாது நிறுவனத்திலுள்ள சகல வளங்களையும் விளைதிறனுடன் பயன்படுத்தி நிறுவனத்தின் விளைதிறனை மேம்படுத்துதல் அத்தியாவசியமானது.
ஆரம்ப காலங்களில் கல்வி நிருவாகமானது ஒப்பீட்டடிப்படையில் பொது நிருவாகக் கோட்பாடுகளையும் சிந்தனைகளையும் அடியொற்றி யதாக இருந்து வந்துள்ளன. பொது நிருவாகத்துறையில் உயர்தொழில் அனுபவம் மிகுந்தவர்களால் விருத்திசெய்யப்பட்ட கோட்பாடுகளும் கொள்கைகளும் கல்வி நிருவாகத்திலும் இடம்பிடித்திருந்தன. பாடசாலை முகாமைத்துவத்தில் அதிபர்களின் தலைமைத்துவம், ஆசிரியர்களின் பொறுப்புகள் மற்றும் இருசாராரினதும் ஆளுமைகள் பொதுத்துறை நிருவாகத்திலிருந்தும் பெருமளவில் வேறுபட்டுக் காணப்பட்ட வேளையில் கல்வி முகாமைத்துவமும் தனித்துறையாக விருத்திபெறத் தொடங்கியன.
இன்று கல்வித்துறையிலே முகாமைத்துவம் தொடர்பான ஆராய்ச்சிகளும் அதன் பிரயோகங்களும் விரிவான முறையில் இடம்பெற்றுவருதல் இதற்குச் சான்றாகும். குறிப்பாக பாடசாலை முகாமைத்துவம் தொடர்பில் குவியப்பட்டு வரும் சிந்தனைகளும் ஆய்வுகளும் கவனத்திற்குரியதாக உள்ளன.
பாடசாலை முகாமைத்துவத்தில் பங்கேற்பவர்கள் நிறுவனம் பற்றிய அகக்காட்சி பெறுவதற்கும், பாடசாலைகளில் மாணவரின் வினையாற்றல்களை மேம்படுத்துவதனூடாக அடைவை உயர்த்து வதற்கும், இருபத்தோராம் நூற்றாண்டில் அறிவு யுகத்தில் கற்றலை மேம்படுத்துவதற்கான உபாயங்களை இனங்காண்பதற்கும் உரிய வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். இதற்கென நிறுவனத்தில் கிடைக் கும் வளங்களை முகாமைத்துவம் செய்தலும் நாட்டின் கல்விக்கொள் கைகளுடன் இணைந்த வகையில் பயனுள்ள தீர்மானங்களை மேற்கொள்ளவதும் இன்றைய பாடசாலை முகாமையாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் விடயங்களாகும். இதற்கெனத் தெளிவான தொலைநோக்கும் அத் தொலைநோக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இலக்குகளும், நோக்கங்களும் உருவாக்கப்பட்டு அவற்றை அடைவதற்கான வழிமுறைகளையும் பாடசாலை முகாமை யாளர்கள் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக அண்மைக் காலங்களில் இலங்கையின் பாடசாலை முறைமையில் அறிமுகமாகி யுள்ள புதிய கொள்கைகளின் அடிப்படையிலான நிகழ்ச்சித் திட்டங்களான பாடசாலை மட்ட முகாமைத்துவம், பாடசாலை மேம்பாட்டுத்திட்டம், ஆயிரம் பாடசாலைகள் திட்டம் முதலியன விளைதிறன்மிக்க முகாமையாளர்களை எதிர்பார்த்திருக்கின்றன.