இந்தப் பூக்கள் விற்பனைக்கு அல்ல by வைரமுத்து Published by சூர்யா லிட்ரேச்சர் , 27 th Edition
எங்கள் வீட்டு மொட்டை மாடிதான் இவர் கவிதை புரியும் தவச்சாலை. தென்னை மரங்களின் அடர்ந்த பசுமையில்… அரசமரத்தின் இலைக்குலுக்கலில்… வேப்பமரத்துத் தளதளப்பில்… நிறம்மாறும் வானத்தில்… பறவைபோல் செல்லும் விமானத்தின் காட்சியில்… விமானம்போல் பறக்கும் பறவையின் காட்சியில் கலந்து லயித்துப்போய்இ தன்னை மறந்து கவிதை வரிகளை உதடு குவித்து உச்சரித்துக் கொண்டிருக்கும்போது ஒரு பரவசம் இவர் முகத்தில் தவழ்ந்து கொண்டிருக்கும். கண்கள் கவிதையில் தோய்ந்து மினுமினுக்கும். தீடீரென்று சிரித்துஇ திடீரென்று முகஞ்சுருங்கி ஏதோ ஒரு வெறியில் எழுதிக் கொண்டிருப்பார். தேநீர் எடுத்துக்கொண்டு நான் மேலே செல்வேன். எதிரே உட்காரச் சொல்லிக் கவிதை படித்துக் காண்பிப்பார். அந்த உச்சரிப்பில் உயிர் கலந்து… உணர்ச்சி குழைந்து…. கவிதை பொங்கிவரும் கம்பீரம் என்னை உருக வைத்துவிடும். கவிதை சொல்லிவிட்டு மீசையைத் தடவிக்கொண்டே என்னைப் பார்ப்பார். அந்தந்த வரிகளுக்கேற்ற பாராட்டையும் விமரிசனத்தையும் சொல்வேன். ஆறிப்போன தேநீரை மகிழ்ச்சியோடு அருந்திவிட்டு மேலும் உற்சாகமாக எழுதத் தொடங்குவார்.
இவருடைய எழுத்தின் உத்வேகம்… ஆவேசம்… கவிதைகளை ஒரு பெருமழையாய்க் கொண்டுவந்து கொட்டும் வேகம் எல்லாம் எனக்கு மிக நன்றாய்ப் புரிகிறது; அந்தத் தீவிரம் என்னை எப்போதும் திகைக்க வைக்கிறது.
இந்த நூலில் காணப்படும் கவிதைகள் பல்வேறு முகங்கொண்டவை; பல்வேறு அகங்கொண்டவை.
வெவ்வேறு உருவங்கள்; வெவ்வேறு உள்ளடக்கங்கள்; வெவ்வேறு உத்திகள்; செதுக்கி நிறுத்தியதுபோலும் படிமச் சித்திரங்கள்; உயிரியக்கமாய்க் கவிதைகளில் ஊடாடும் குறியீடுகள். கவிதை தன் வளமான கூறுகளோடு ஒரு வசந்தகாலத்தை இந்தத் தொகுதியில் உற்பத்தி செய்திருக்கிறது