தமிழ் அழகியல் by ஏ.என்.கிருஷ்ணவேணி Published by சேமமடு பதிப்பகம், 1st edition,
உள்ளடக்கம்: தமிழ்க் கவிதையியல், அறநெறிக்கால அழகியல், தமிழ்க் கவிதைப் பாரம்பரியத்தில் பக்திச்சுவை,இலக்கண நூல்களின் அடிப்படையில் அழகியல்,நாட்டிய அபிநயங்களும் கலை அநுபவமும் , பண்டைத் தமிழர் மதமும் அழகியலும்,தென்னிந்திய சிற்பக்கலை மரபு
அழகியல் கலையின் அழகுசார் பண்புக்கூறுகளை அடிப்படையாகக் கொண்ட கலைக் கொள்கைகள் பற்றி விசாரணையாக விளங்குவது கலை உருவாக்கம், ரசனை, வியாக்கியானம், விமர்சனம், மதிப்பீடு போன்ற விடயங்களின் அடிப்படையிற் கலைகளையும், கலைக்கொள்கைகளையும் ஆராய்வது. மேலைத்தேசத்தைப் பொறுத்த மட்டில் அழகியல் நீண்டகால தத்துவத்துறையின் ஒரு பிரிவாக வளர்ந்து பின் தனித்துறையாக தனக்கேயுரிய முறைமையியலூடு வளர்ந்து வந்தது. ஒரு செழுமையான கலை விமர்சனம் அரிஸ்டோட்டில், பிளேட்டோ காலத்தில் இருந்து வந்தமையை அழகியல் வரலாறு எடுத்துக் கூறுகிறது. 18ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் மேலைத்தேய அழகியல் வரலாற்றில் ரசனை பற்றிய கருத்தாடல் மூலம் திறனாய்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து சுதந்திரமான, ஆரோக்கியமான, ஓர் விமர்சனம் கலையை அடிப்படையாகக் கொண்டு வளர்வதற்கு வழிவகுத்தது.
மேலைத்தேயக் கலை மெய்யியலாளர்களில் இமானுவேல் காண்ட் (1790) டேவிட் ஹியூம்(1757) போன்றோர் ரசனையை அடிப்படையாகக் கொண்ட கலை, அழகியல் அநுபவம் பற்றிய கொள்கைகளை விளக்கியுள்ளனர். இந்திய அழகியல் சமஸ்கிருதக் கவிதையியலை ஆதாரமாகக் கொண்டு அலங்கார சாஸ்திரங்களின் அடிப்படையில் வளர்ந்து வந்துள்ளது. பரதரது நாட்டிய சாஸ்திரம் தொடக்கம் பண்டிதர் ஜெகன்னாதரது ரஸகங்காதரம் வரைக்கும் அலங்கார சாஸ்திர நூல்கள் தோன்றி வளர்ந்துள்ளன.
இந்நிலையிற் தமிழ் அழகியல் பற்றிய ஆய்வுகள் எத்தகைய வளர்ச்சியைப் பெற்றுள்ளன என்று ஆராயும் போது, அது வரன்முறைக்குட்பட்ட வகையில் ஆராயப்பட்டுள்ளதா என்ற வினா எம் முன்னால் எழுகிறது. கிரேக்கம், லத்தீன், வடமொழிகளுடன் ஒப்பிடக் கூடிய தொன்மையும், இலக்கியச் செழுமையும், அழகும் கொண்டது தமிழ்மொழி. பரதரது நாட்டிய சாஸ்திரத்துடனும், அரிஸ்டோட்டிலின் கவிதையியலுடனும் ஒப்பிட்டு நோக்கும் அளவுக்கு கலை, இலக்கியங்களைக் கொண்டது. தொல்காப்பியம் மூன்றாவது அதிகாரமான பொருளதிகாரம், நாட்டிய சாஸ்திர ‘ரசனைக் கொள்கை’ அரிஸ்டோட்டிலின் ‘கதாசிஸ்’ கொள்கையுடன் ஒப்பிட்டு நோக்கும் இயலாகப் பொருளதிகாரம் ஆறாவது இயலாக ‘மெய்ப்பாட்டியல்’ விளங்குகிறது. மிக அண்மைக்காலமாகப் பொருளதிகாரத்தை, அதன் வைப்பு முறையை ஆதாரமாகக் கொண்டு அதனை ஒரு கவிதையியல் நூலாக அங்கீகரித்தமை கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இந் நிலையிலும் தொல்காப்பியத்தை தளமாகக் கொண்ட தமிழ் அழகியல் நூல்கள் குறைவாகவே உள்ளன.