புத்தம் சரணம் by அ.மார்க்ஸ் Published by Adaiyalam Publication
கௌதம புத்தர் குறித்து இதுவரை நாம் அறியாத பல அபூர்வமான செய்திகளை, மிக எளிய நடையில் பல நூல்களைப் பயின்று அடிப்படை ஆதாரத்துடன் தமிழ் உலகிற்குத் தந்துள்ளார் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள்.
துறவற வாழ்விற்கு மட்டுமல்ல, எப்படிப்பட்ட வாழ்வைத் தேர்ந்தெடுத்துள்ளோர்க்கும் அல்லது தனது விருப்பமின்றியே பல்வேறு காரணங்களால் வாழ்வின் ஏதோ ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டோர்க்கும் அடைபட்ட உள்ளத்தில் ஜன்னல்களைத் திறப்பதாகவே பௌத்த நெறியும் புத்தரின் வாழ்வும் இருக்கின்றனவென்பது திண்ணம்.
அதனால்தான் புத்தர் குறித்து மிகத் தெளிந்த மனத்துடன் ஒரு கவிதையாக, தத்துவமாக தோன்றி உருப்பெற்று மறைந்து செல்கிற தொடர்ச்சியாக என்றென்றும் நிகழ்ந்துகொண்டிருக்கும் நீரோட்டம் ஒன்றின் ஒரு திவலையாகவே எல்லா வாழ்க்கைகளும் அமைகின்றன.
இந்த வாழ்வின் தவிர்க்க இயலாததாகிய துக்கம் அதை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள் ஆகியன அவருக்கு விளங்கின என்று குறிப்பிடுகிறார் நூலாசிரியர் அ.மாக்ஸ்.
‘இந்தியாவில் தோன்றிய சிந்தனைகளில் மனங்களை பற்றி அதிக அக்கறை கொண்டது பவுத்த மதம். உடல்களைக் கட்டுப்படுத்திய இந்து மதத்திற்கும் உடலியக்கத்திற்கு மூலமான மனத்தைப் பற்றிக் கவலைப்பட்ட பவுத்தத்திற்கும் உள்ள முரண்பாடுகள் குறிப்பிடத்தக்கன. மன விடுதலைக்கானது’ என்ற கருப்புப் பிரதிகளின் சிறிய முன்னுரையுடன் தொடங்குகிறது இந்நூல்.
துறவு மேற்கொண்டு செல்லும் வழியில் சித்தார்த்தர் தனது அரச உடைகளை ஓர் ஏழை விறகு வெட்டியிடம் மாற்றிக்கொண்டு விறகு வெட்டியின் எளிய உடைகளை ஏற்றுக்கொள்கிறார்.
புத்த சங்கத்தில் சிரமண இயக்கத்தில் சேர்பவர்கள் மூன்று துணிகள், பிச்சைப் பாத்திரம், கத்தி, வடிதுணி, மாசி, இடுப்புத்துணி முதலிய எட்டுப் பொருள்களைத் தவிர வேறு எந்தத் தனிச் சொத்துக்களையும் வைத்துக்கொள்ளக்கூடாது என்பது கட்டளை. இதைப் படித்தறியும்போது எவ்வளவு தீர்க்கமும் தெளிவும் பெற்ற மதியினர்களாக வாழ்க்கை நெறி வகுத்து அளித்துள்ளார்கள் என்பது பெருமைக்குரியதாக இருக்கிறது.