வளிமண்டலவியலும் காலநிலையியலும் by எஸ்.அன்ரனி நோர்பேட் Published by சேமமடு பதிப்பகம், 2nd Edition
உள்ளடக்கம் : வளிமண்டலவியலும் காலநிலையியலும் ஓர் அறிமுகம், காலநிலை மூலகங்களை அளவிடுதல், வானிலை அவதானிப்பும் பகுப்பாய்வும் வளிமண்டலச் சூழலில் செய்மதித் தொலையுணர்வு, அயனப் பிரதேச வானிலை ஒழுங்குகள்,அயனப் பிரதேசத்தின் பொதுப்பார்வை
அளவுத் திட்டக் குழப்பங்கள்,அயனச் சூறாவளிகள் மொன்சூன் சுற்றோட்டம்,வளிமண்டலப் பொதுச்சுற்றோட்டம்,தோண்வைற்றின் காலநிலைப் பாகுபாடு
புவியியல் என்பது ஒரு பன்னெறி சார்ந்த கற்கை நெறி. இதில் சமூக, அறிவியல் துறைகளின் பங்களிப்பு இருந்து வந்தாலும், அடிப்படையில் இவ்வறிவுத்துறை பெருமளவுக்கு இயற்கை விஞ்ஞானத்துறையின் செல்வாக்குக்கு உட்பட்டதாகவே காணப்படுகின்றது. பௌதிகவியல், கணிதம், தாவரவியல் போன்ற விஞ்ஞானத்துறை சார்ந்த முறைமைகளை உள்வாங்கி விஞ்ஞானரீதியான ஒரு கற்கை நெறியாக வளர்ச்சி பெற்று வந்துள்ளது.
மனித சமுதாயத்தின் வாழிடமாக விளங்கும் புவியைப் பற்றிய ஆய்வே புவியியலாகும். இயற்கைச் சூழலின் முக்கிய அம்சமாக விளங்கும் காலநிலை இதன் பிரிவாகக் காணப்படுகின்றது. காலநிலையியல் என்பது பௌதிகப் புவியியலுடன் ஒன்றிணைந்தவொரு பகுதியாக விளங்குகின்றது. இக்காலநிலையியலின் அடிப்படைத் தத்துவங்கள் வளிமண்டலவியலிருந்து பெறப்படுகின்றது. புவிமேற்பரப்பில் காலநிலை, பிரதேசரீதியான மாறுபாடுகளைக் கொண்டிருப்பதுடன், அண்மைக் காலங்களில் மேல் வளித்தாக்கங்களின் பாதிப்பினையும் காணமுடிகின்றது. இதனாலேயே புவியியலாளர்கள் விஞ்ஞான காலநிலையியலில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் காலநிலையியல் மற்றும் வளிமண்டலவியல் விஞ்ஞானத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. வானிலை மூலகங்களை அளவிடும் கருவிகளில் தொழில் நுட்பரீதியான பல மாற்றங்கள் ஏற்பட்டன. கணித மாதிரிகளைப் பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. வானிலைச் செய்மதிகளின் அறிமுகம், அதிவேகக் கணினிகளின் பயன்பாடு காரணமாக, வளிமண்டலவியலில் அபரிதமான மாற்றங்கள் ஏற்பட்டன. இத்தகைய விருத்திகளும், அவதானிப்பு நுட்ப முறைகளில் ஏற்பட்ட நவீன மாற்றங்களும் காலநிலையியல் மற்றும் வளிமண்டலவியலில் விஞ்ஞானரீதியான பல முன்னேற்றங்களை ஏற்படுத்தின.
இத்தகைய உறுதியான ஒரு விஞ்ஞான அடிப்படையைக் கொண்டு வளர்ச்சி பெற்று வந்துள்ள வளிமண்டலவியல் மற்றும் காலநிலையியலின் பல்வேறு அம்சங்களை விளக்கமாக எடுத்துக் காட்டுவதே இந்நூலின் பிரதான நோக்கமாகும். புவியியற் கல்வி, மரபு வழி சார்ந்ததாகவன்றி மாறாக, புத்தாக்க சிந்தனைக்கும், புதிய பரிமாணங்களுக்கும் இடமளிப்பதாக இருத்தல் வேண்டும். பௌதிகப் புவியியலின் ஒரு பகுதியாகக் காணப்படும் வளிமண்டலவியலிலும், காலநிலையியலிலும் ஏற்பட்டு வரும் நவீன விருத்திகளை இலங்கையின் உயர் நிலைப் புவியியற் கல்வி பயிலும் மாணவர்கள் விளங்கிக் கொள்ளல் வேண்டும். ஒவ்வொரு விடயமும் கருத்தியல்ரீதியில் விஞ்ஞானரீதியாக விளங்கிக் கற்கப்படல் வேண்டும். வளிமண்டலவியல், காலநிலையியல் தொடர்பாக இளந்தலைமுறையினரான புவியியல் மாணவர்கள் கற்றுக் கொள்வதற்கு ஏராளமுண்டு.